ஞாயிறு, 21 ஜூலை, 2013

கலை உலகில் ஒரு அகோரி

   .
ஷாராஜின் சமகால நவீன தாந்த்ரீக ஓவியங்களில் தாந்த்ரீக இயங்கியல் 


Beware of the left; the cult of Shakthi
-James Joyce

தாந்த்ரீகம் இன்று மேற்கத்திய நாடுகளிலும் வெகுவாகப் பரவியிருக்கிறது. ஆன்மீக, யோக வட்டாரங்களில் மட்டுமன்றி ஓவியம், இசை உள்ளிட்ட நுண்கலை(fine art)களிலும் அது உலகளாவிய செல்வாக்கு பெற்றுள்ளது. தாந்த்ரீகத்தின் பூர்வீகம் இந்தியா என்றாலும் இந்திய ஓவியர்கள் மற்றும் தாந்த்ரீகம் புராதனமாக உள்ள பிற கிழக்கு நாடுகளின் ஓவியர்கள் மட்டுமன்றி ஐரோப்பிய, அமெரிக்க ஓவியர்களும் இந்து தாந்த்ரீகத்தின் அடிப்படையிலான மரபு சார் மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியங்களைப் படைத்து வருகின்றனர்.  போலவே திபெத்தின் வஜ்ராயண பௌத்த தாந்த்ரீகம், சீனாவின் தாந்த்ரீக முறையான தாவோயிஸம் அடிப்படையிலான ஓவியங்களும் படைக்கப்படுகின்றன. ஷாராஜ் ஓர் இந்தியர் என்பதாலும், அவர் படைப்பது (பெரும்பாலும்) இந்து மத தாந்த்ரீகத்தையே என்பதாலும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டியது இந்து மத தாந்த்ரீகத்தையே.

இந்து தாந்த்ரீகம் இந்துத்வம் எனப்படும் ஆரியமயமாக்கலுக்கும், இந்தியாவில் ஆரியர்களின் குடியேற்றத்துக்கும் முற்பட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்திலான ஹரப்பா-மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சிகளிலேயே சிவ-ஷக்தி மற்றும் லிங்க-யோனி வழிபாடு மேலோங்ககியிருந்த அடையாளங்களைக் காணலாம். வேத காலத்துக்கு முற்பட்ட மூதாதை திராவிட நாகரிகத்தின்படியாக இருந்த அப்போதைய ருத்ரன் வடிவையே பின்னாளில் குடியேறிய ஆரியர்கள் அழித்தொழிக்கப் பார்த்து, இயலாத பட்சத்தில் சிவன் வடிவாக ஸ்வீகரித்துக் கொண்டார்கள். பிற்காலத்தில் ப்ராமணீயத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த புத்த மதத்தையும் இவ்வாறே அழித்தொழிக்க முயற்சித்து, இயலாததால் புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகக் காட்டி ஆரியமயமாக்கிய அரசியலும் இங்கு நினைவுகூரத் தக்கது.

இந்து தாந்த்ரீகம் குண்டலினி யோகத்தையும் சிவ-ஷக்தி வழிபாட்டையும் ஆதாரமாகக் கொண்டது. தாந்த்ரீகம் அல்லாத பொது வழிபாட்டைக் கொண்டவர்களில், சிவனை முதன்மைப்படுத்தி ஷக்தியை இரண்டாம் பட்சமாகக் கொள்பவர்கள் சைவர்கள், ஷக்தி/காளியை முதன்மைப் படுத்தி சிவனை இரண்டாம் பட்சமாகக் கொள்பவர்கள் சாக்தர்கள் என்பது பரவலாக அறியப்படுவது. தாந்த்ரீகத்திலும் இதே போன்ற சமய மரபு(sect)கள் உண்டு. அதன்படி ஷக்தி வழிபாட்டினைக் கொண்டது வாம மார்க்கம் (Vama margam) அல்லது கௌல மார்க்கம் (Kaula margam) ஆகும். இது இடது மார்க்கம் எனப்படும். யோக, தாந்த்ரீக கோட்பாடுகளின்படி ஆண்-பெண் இரு பாலரிலுமே உடலின் இடது பாகம் பெண் ஷக்தி (female energy) கொண்டது. எனவேதான் இந்தப் பெயர். அதே போல சிவ வழிபாட்டினைக் கொண்ட தாந்த்ரீகம் தட்சிண மார்க்கம் (Dhakshina Margam). அது வலது மார்க்கம் எனப்படும். ஆண்-பெண் இரு பாலரிலுமே உடலின் வலது பாகம் ஆண் ஷக்திக்கு (male energy) உரியது என்பதால் அப் பெயர்.

சிவ வழிபாட்டைக் கொண்ட வலது (தட்சிண) மார்க்கம் மிதப் போக்கு கொண்டது. குண்டலினியை யோகப் பயிற்சி வாயிலாக மேலெழுப்பி பேரின்பத்தை(ecstacy)யும் இறைநிலை*யையும் அடைவதே அதன் நோக்கம். இதில் புலன் கடந்த ஆற்றல் பெறும் சடங்குகள் (occult retuals) எதுவும் கிடையாது. வழிபாடுகள் மட்டுமே உண்டு. இது வெள்ளை மாந்தரீக (white magic) பிரிவில் அடங்கும். காளி, ஷக்தி மற்றும் பைரவி வழிபாட்டைக் கொண்ட இடது (வாம/கௌலா) மார்க்கம் தீவிரப் போக்கு கொண்டது. மைதுனம் (பாலியல் சடங்கு) மூலம் குண்டலினியை மேலெழுப்பி பேரின்பத்தையும் இறைநிலையயும் அடைவதே அதன் செயல் முறை. இந்த சமய மரபு (sect) நிர்வாணமாகத் திரிதல், பாலியல் சடங்குகளை மேற்கொள்ளுதல், மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், மிருக பலி மற்றும் மனித பலி கொடுத்தல், மனித (பிண) மாமிசம் புசித்தல், சுடுகாட்டில் பிணங்களோடு தியானித்தல், எலும்புகளையும் கபாலத்தையும் அணிதல், மாந்த்ரீக சக்திகள் பெறுவதற்காக அமானுஷ்ய சடங்குகளைச் செய்தல் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. இது கருப்பு மாந்தரீக (black magic) பிரிவில் அடங்கும்.

தமிழ் சித்தர்கள், காஷ்மீர பண்டிட்கள் போன்றவர்கள் தட்சிண (வலது) மார்க்கத்தினர். அகோரிகள், காபாலிகர்கள், கௌலர்கள் போன்றவர்கள் வாம (இடது) மார்க்கத்தினர்.

இடது மார்க்கம் துறவு வாழ்க்கையைப் புறக்கணித்து மெய்யுணர்தல் (mystisism) வழியை மேற்கொள்வது. லோகாயத (mundane) வாழ்வில் ஈடுபட்டபடியே மோட்சத்தை அடைய முடியும் என்பதே அதன் மையக் கோட்பாடு. அதை அடையாளப்படுத்தும் விதமாகவே அது பஞ்ச மகார (pancha mahara) தத்துவம் எனப்படும் சடங்கை மேற்கொள்கிறது. மத்யம் (மது), மாமிசம், மல்ஸ்யம் (மீன்), முத்ரா (முத்திரை), மைதுனம் (கலவிச் சடங்கு) ஆகியவையே பஞ்ச மகாரங்கள்.

மைய ஓட்டத்திற்கு மாறாக இயங்கும் வாமாச்சார தாந்த்ரீகம் வேத மறுப்பின் பாற்பபட்டது என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் வேதங்கள் முழுமையையும் அது எதிர்ப்பதில்லை. அவற்றின் உயரிய கருத்துக்களையும், பேருண்மைகளையும் ஏற்றுக்கொள்கிறது. ஜாதிக் கருத்துகள், உயர்வு-தாழ்வு பேதங்கள், ஒழுக்க விழுமியங்கள், ஆச்சார (orthodox) அனுஷ்டானங்கள் போன்றவற்றை மட்டுமே மறுக்கவும் எதிர்க்கவும் செய்கிறது. இதனால் பொதுவாக அடித்தட்டு மக்களுக்கானதாகவும், தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கானதாகவுமே இருந்து வருகிற அது உயர்தட்டு மக்களால் – குறிப்பாக ஆச்சார ப்ராமணர்களால் வெறுத்து ஒதுக்கப்படுவதாகவும் இருக்கிறது.

ஷாராஜின் நவீன தாந்த்ரீக ஓவியங்கள் இடது மார்க்கமான வாமாச்சாரத்தின் சமயக் கொள்கைகளை (doctrine) அடிப்படையகாகக் கொண்டவை. தன்னிலான எதிர் கவிஞரிலிருந்து தன் மூலாதாரங்களை எடுத்துக்கொண்ட ஒரு தாந்த்ரீக ஓவியர் இடது மார்க்கத்தை மேற்கொள்வது ஆச்சரியமானதல்ல. மேலும் அவர் இன்னமும் கடவுள் மறுப்பாளரே என்பதால் இதுதான் அவருக்குப் பொருத்தமானதாகவும் இருக்க முடியும்.

“நான் ஷாக்தன். ஆனால், பொதுச் சமய மரபிலோ, தாந்த்ரீக சமய மரபிலோ உள்ளபடியாக அல்ல. சித்தாந்தப்படியாக மட்டுமே. ஆன்மீக அறிவியல்வாதி என்ற முறையில் எனது ஷக்தி வழிபாடு என்பது எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் ப்ரபஞ்ச ஷக்தியை (cosmic energy) உணர்தலும் வெளிப்படுத்தலுமே. இதில் ஆன்மீகமும் உண்டு; அறிவியலும் உண்டு. வெறுமனே அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த ஷக்தி அணுக்களும் (atom) மூலக்கூறுகளுமாக (molicule) மட்டுமே எஞ்சும். நான் அறிவியல்வாதியே (sciencist) தவிர விஞ்ஞானி  (scientist) அல்ல. மேலும், அடிப்படையில் நான் படைப்பாளன். கலையில் (கவிதை, ஓவியம் எதுவாயினும்) அறிவியலைப் பயன்படுத்தலாம். ஆனால், வெறும் அறிவியல் மட்டுமே கலையாகிவிடாது. அதற்கு ஆன்மீகத்தின் துணை தேவைப்படுகிறது. எனவேதான் ப்ரபஞ்ச ஆற்றலான (cosmic power) குண்டலினி சக்திக்கும், ப்ரபஞ்ச இருத்தலின் (cosmic existence) மும்மை மூலாதாரங்களான (trinity sources) படைத்தல்-காத்தல்-அழித்தல் ஆகிய ஆற்றல்களுக்கும், உயிர்கள் அனைத்திலும் , உயிரும் உருவமும் அற்றவையிலும் கூட உள்ள அடிப்படை முக்குணங்களான சத்வ – ரஜோ – தமோ – குணங்களுக்கும் இந்து மதத்தில் கொடுக்கப்பட்டுள்ள உருக்கொடுப்பு(embodiment)களான கடவுள் உருவங்களையும், மற்ற உருவகங்கள் (metophers) மற்றும் குறியீடுகளையும் (symbols) அதனதன்படியே பயன்படுத்துகிறேன்” என்கிறார் ஷாராஜ்.

சமகால நவீன தாந்த்ரீக ஓவியங்களான இவை தாந்த்ரீகத்தின் வெறும் விளக்கச் சித்திரங்கள் (illustrations) அல்ல. இயல் கடந்த ஆராய்வு  மனம் (metaphysical mind) கொள்ளும் மெய்யுணர்வு(mysticism)களும், ஆன்மீக தரிசனங்களும் (spiritual visions), அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான மெய்ம்மை(reality)களும், படைப்பு மனத் தோற்றங்களும் (creative phantacy) சார்ந்த படைப்பாக்கங்களே. உள்ளடுக்குகள் மிகுந்த – 10 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை விளக்கப்பட வேண்டியதாக உள்ள – இவ்வோவியங்கள் ஆழ்ந்த பொருள் கொண்டவை; ஆன்மீக விழிப்புணர்வை வலியுறுத்துபவை; ஆழ்நிலை தியானத் தன்மையை தன்னகத்தே கொண்டவை.

ஆனால், தாந்த்ரீகம் குறித்து அறியாதவர்களுக்கு முதல் பார்வையில் இவை ஏற்படுத்துவது பலத்த அதிர்ச்சியையே. காரணம் அவற்றில் இடம்பெறும் கடவுள் – கடவுளிகளின் (பொதுவாக சிவன் - ஷக்தி/காளி) நிர்வாணத் தோற்றங்கள், பாலியல் சித்தரிப்புகள், பாலியல் சார்ந்த படிமங்கள் ஆகியவை. குறிப்பாக சிவனின் கபாலம், ஷக்தி/காளியின் யோனிக் கண், யோனித் தாமரை, நிலவின் முலைகள், முலைக் கொம்புகள் போன்றவை. இந்த இணையதளத்தை வடிவமைத்தவரும், ஷாராஜின் நெருங்கிய உறவுக்கார இளைஞருமான ஜீவன் குமார் விஷ்வகர்மன், இவ்வோவியங்களில் ஒன்றிரண்டைப் பார்வையிட்டதுமே, “கலை உலகில் ஓர் அகோரி!” என்றார்.

அந்த ஒற்றை வரி மதிப்பீடு மிகச் சரியானது என்கிறார் ஷாராஜ்.

“கோரா (gora) என்றால் இருள் என்று பொருள். அகோரா (agora) என்றால் இருளை விலக்குதல் என்று பொருளாகும். அகோரி என்பதற்கு இருளை விலக்கி வெளிச்சத்தைக் கொண்டு வருபவர் என்று பொருள். அந்தப்படி பார்க்கும்போது நிச்சயமாக நானும் ஓர் அகோரிதான். மக்களின் மனதில் அறியாமை என்கிற இருள் இன்னமும் இருக்கிறது. தமிழ் சித்தர்கள் சொல்வது போல, அவர்கள் தங்களுக்குள் இருக்கும் கடவுள் நிலைகளை அறியாமல், வெளியே இருக்கும் கடவுள் உருவங்களை வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். நானும் எனது ஓவியங்களும் எல்லா மனிதர்களிலும் உள்ள கடவுள்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம். தட்சிண மார்க்கத்தவர்களான சித்தர்கள் தங்கள் பாடல்களில் செய்ததைத்தான் வாமாச்சாரத்தைச் சேர்ந்த நான் எனது ஓவியங்களில் சமகாலத்துக்குத் தக்கபடி செய்துகொண்டிருக்கிறேன்.

“மற்றபடி கடவுள்களின் நிர்வாணம் மற்றும் பாலியல் சித்தரிப்புகள் இந்து மதத்திற்குப் புதிதல்ல என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. கஜுராஹோவிலும் கோனார்க்கிலும் மட்டுமல்ல, இந்தியாவெங்கிலும் அனேக சிவ-விஷ்ணு ஆலயங்களில்  கோபுரங்களிலும், கருவறை தவிர்த்த பிற பகுதிகளிலும் ஹார்ட்கோர் பாலியல் படங்களை மிஞ்சக் கூடிய வகையிலான, கடவுள்களின் பாலியல் லீலைகளைக் காட்டும் தாந்த்ரீக சிற்பங்களையும் சுதைகளையும் காணலாம். இந்து மதம் பாலியலை விலக்கப்பட்ட கனியாக்கவில்லை. பாலியல் மூலம் பேரின்பத்தை, இறைநிலையை அடையலாம்; அடைய வேண்டும் என்றே அது வலியுறுத்துகிறது. சைவம் மற்றும் ஷாக்தத்தின் அடிப்படையே அதுதான். கோவில் கருவறையில் ஆண்குறி(லிங்கம்)யையும், பெண்குறி(யோனி-பீடம்)யையும் பூஜித்து வழிபடுவதுதானே சைவம்! மதத்தில் இல்லாத ஒன்றையோ, மதத்திற்குப் புறம்பானதையோ நான் வரையவில்லை. தாந்த்ரீகத்தில் இருப்பதை சமகாலத்துக்குத் தக்கபடி அறிவியல் மற்றும் உளவியல் மயமாக்கவும், அதன் உட்பொருள்களை ஆழப்படுத்தவும்தான் செய்திருக்கிறேன்.”

வாஸ்தவம்தான்! வாமாசார மார்க்கமே நிர்வாணத்தையும் பாலியல் சடங்குகளையும் அடிப்படையாகக் கொண்டது எனும்போது அதன் ஓவியங்கள் வேறெப்படி இருக்கும்? ஆலயங்களில் உள்ள நிர்வாண மற்றும் பாலியல் சித்தரிப்புச் சிலைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படித்தான் ஷாராஜின் நவீன தாந்த்ரீக ஓவியங்களையும் பார்க்க வேண்டும். அவற்றில் நிர்வாணம் மற்றும் பாலியலை மட்டும் பார்த்தால் உங்களுக்குள் அவை மட்டுமே உள்ளன என்று அர்த்தம். அவற்றைக் கடந்து உட்பொருள்களைக் காண முடிந்தால் உங்களுக்குள் தரிசனங்கள் துவங்கிவிட்டன என்று அர்த்தம்.

.............................................................................................................
அடிக் குறிப்பு : * இறைநிலை நான்கு வகைப்படும்.
               1. சாலோக்யம் - இறை உலகில் வாழ்தல்
               2. சாமீப்யம் - இறை அருகில் இருத்தல்
               3. சாரூப்யம் - இறை உருவை அடைதல்
               4. சாயுஜ்யம் - இறையுடன் கலத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக