ஞாயிறு, 17 நவம்பர், 2013

நர்சிம் படைப்பு

வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா,

"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா? "

மனைவியின்,இந்த வரிகளை நயமாக எழுதி இருந்தாலும், சிச்சுவேசன் என்னமோ சுப்ரமணியபுரம் படத்தில் அண்ணி பேசும் டெரர் டயலாக்குக்கு ஈக்குவலானது.. தட்டுக்கும் தோசைக்குமான இடைவெளி அதிகம் இருந்தது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்,‘தோசை பறந்தது’. அடுத்து தோசைக்கல்லே பறக்கும் என்றாகிவிடுமோ என்ற அச்சத்தில்.. “என்ன இப்பிடி சொல்லிட்ட..உன்னைப் பத்தி எவ்வளவு எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு.விட்டு,ட்டு,டு..என்று விக்கி வெலவெலத்தாலும், சட்டை கிழியாமல் இருக்க, இந்த இரவை அவளுக்கான கடிதமாய்...

******

நீ வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா,

என்மீதான உன் காதல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பிடித்தம் மிகப் பிடிக்கும்...

எங்கே, எப்பொழுது, ஏன், தர்க்கம், நியாயம், துரோகம், என எந்தவிதமான வார்த்தைகளுக்கும் கட்டுப்படாமல்..ஒரு காற்றின்,சுதந்திரக் காற்றின்,புனித பிம்பம் போன்றானது நம் காதல் என்று உணர்ந்த தருணம் மீண்டும் நான் பிறந்த தருணம். ஏதோ ஒரு சொந்தக்கார திருமணத்தில் நீ நிற்கும் இடங்களிலேயே நானும் நின்று, மூலை முடுக்கில் இருந்து ஆங்கிள் வைத்து உன்னைப் பார்த்துப் பார்த்து, ஹும்ம்ம்.

கல்யாணவீட்டின் வழக்கமான ஏதோவொரு அலட்டல் மாமாவிடம்.. “பெரியம்மா பொண்ணுதானே அவங்க” என்று சந்தில் சிந்து பாடி, “யாருன்னு தெரியலயாடா.. உங்க சாந்தி அத்தைப் பொண்ணுடா அது” என்று அவர் பால் வார்த்தார்.

அதன் பிறகு உன்னைப் பார்க்க உன் வீட்டிற்கு நான் வந்த அந்த சனிக்கிழமை என்னில் இன்னும்.

சனி பிடித்தது என்பதற்கு அர்த்தம், சனியை மிகப் பிடிக்கும் எனக்கு என்பதாயும் மாறியப் போனது அன்றில் இருந்துதான்.

உன் கண்கள் தான் நான் முதலில் பார்த்தது. கடைசிவரை என்கூட வரப் போகும் கண்கள் என்பதையறியாமல்... அந்தக் கண்கள் பார்த்து நான் பேசியது உனக்குப் பிடித்திருக்கக் கூடும்.என்றாலும் உன் மீதான காதல் வாய்த்த தருணம் நீ என்னை விட்டு மறுநாளே ஊருக்குப் பயணித்தது தான். உன் கண்கள் எனக்குப் பிடிக்கும் என்று தயங்கித் தயங்கி நான் குறுஞ்செய்தி அனுப்பினேன்..‘மங்கை மான் விழிஅம்புகள் தங்கள் மார் துளைத்ததோ?’ என்று பதில் குறுஞ்செய்தியில் உன்காதலையெனக்குச் சொன்ன அந்த தருணம் இன்னும் இன்னும் இன்னும் இருக்கிறது இனிக்கிறது.

அந்த பதில் மட்டும் சற்று மாறியிருந்தாலும் ஐயமே என்பதனால், அதுவொரு நூற்றாண்டு நிமிடம்.

அதன்பின் அந்த ஞாயிறு முழுக்க முதல்முறையாக நான் உன்னோடு குறுஞ்செய்திகளாக என் வாழ்வை மெல்ல மெல்ல மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன் எனக்கேத் தெரியாமல்.அது ஒரு அபூர்வ ஞாயிறு என் வாழ்வில்.

அப்புறம் அன்றிரவு உன்னால் எனக்கு network problem, பதிலிடமுடியவில்லை என்றான அந்த இருவது நிமிடங்கள் நரக தண்டனைத் தருணங்கள் என்று உணர்ந்த அதேவேளைதான் நான் உன்னில் என்னை இழந்து விட்டேன் என்றுணர்ந்த தருணமும்.

திங்களன்றும் நீ அங்கே..என்ன நினைத்தாயோ.. “மொட்டைமாடிக்கு வந்து ஒரு நிமிடம் உங்க வாய்ஸ் மட்டும் கேட்க வந்தேன்” என்று நீ சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவானது இவளுக்கு? என்னுள் நிகழ்ந்த அத்தனை மாற்றமும் இவளுக்கும் நிகழ்ந்து தொலைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன் அப்பொழுது.

செவ்வாய்.. காலையில் சட்டையை எடுத்துப் போடும் பொழுதே புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது.உன்னைப் பார்க்கப் போகிறேன் என்ற சிரிப்பும் ஆவலும் கலந்து கண்ணாடி முன் எப்பொழுதுமில்லாமல் நிறையநேரம் நின்று பார்த்தேன். பின் போட்டிருந்த க்ரே சட்டையை கழற்றி விட்டு வெள்ளைக்கு மாறினேன். காதல் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.வெள்ளைச் சட்டையில் என்னை நீ பார்த்தப் பார்வை இன்னுமென்கண்ணில் இருக்கிறதடி கண்ணம்மா.

நீ ஒருவேளை எனக்கு முன் வந்து, ஒரு நொடி அங்கே காத்திருந்தாலும் உயிர்வலி எனக்கு ஏற்ப்படுமே,ஏனெனில் அந்த இடமும் அங்கு நிற்பர்வர்களைப் பற்றிய எண்ணமும் சமூகம் கொண்ட பார்வையும் இப்படி என்ன என்னமோ தோன்ற... ஒரே அழுத்து..அவ்வளவு வேகம் போனதில்லை நான்.. நீ சொன்ன இடத்தை அடைந்தவுடன்.. உனக்காக காத்திருக்கும்பொழுதே இன்னுமொரு சந்தேகம். ஒருவேளை முதல் ஸ்டாப்பிங்கில் இறங்கி விடுவாயோ என்று.. எதற்கு வம்பு என இரண்டிற்கும் நடுவில் நின்றிந்த அந்த நிமிடங்களில் எத்தனை சந்தோஷம் என்பதை எழுத இன்னும் தமிழில் வார்த்தைகள் கண்டுபிடிக்கவில்லையடி கண்ணம்மா..

தேவதையை சுமந்துவரும் திமிரில் அந்தப் பேருந்து என்னை க்ராஸ் செய்து போகும் பொழுது உன் அழைப்பும் வந்தது.. “ஹே உன்னப் பார்த்தேன்.. வா..” அந்த வார்த்தைகளில் உன் வாழ்நாள்மொத்த சந்தோஷமும் வழிந்தோடியது தெரியுமடி எனக்கு.

அடுத்த நொடி உன் முன் நான்.கண்முன் நீ. கருப்பு நிற சூடியில் தேவதையாய் இருந்தாலும் அப்போதைய என் தேவை உன் கரம் பற்றி கண்பார்ப்பதே..ஏனெனில் நம்மைப் பொறுத்தவரை 24 மணிநேரத்திற்கும் மேலான இடைவெளி என்பது ஒரு யுகக் கணக்காகிப் போனதால்..அதுவும் உன்னை பிரிந்திருந்த முதல் 48 மணிநேரத்திற்கும் மேலான நாள் என்பதால்..அந்தக் கைப் பிடிப்பும்..கண் பார்வையும்..

ரோட்டோர டீக்கடையைப் பார்த்ததும் என் கழுத்தில் கை வைத்து டீக்குடிக்கலாமா என்றாய்..மா என்ற எழுத்தை நீ சொல்லும்முன் அந்தக் கடை வாசலில்..அங்கும் கொஞ்சலாக வெளியில் நின்றே குடிக்கலாம் என்றாய். உன் தோள் உரசி நின்று குடித்த அந்த ஐம்பது பைசா டீ ஐந்து கோடி கொடுத்தாலும் கொடுக்கமுடியாத திருப்தியை கொடுத்ததுனக்குத் தெரியுமாடி?அதுவும் அந்த பிஸ்கட்டை தொட்டுத் தொட்டு நீ குடித்த அழகை நான் பார்த்துக் கொண்டிருக்க, நான் பார்த்த அழகை கடைக்காரன் பார்த்துக் கொண்டிருக்க. அதுவும் ஒரு பொன்நாள்.

பரஸ்பர போலித்தன்மை மயிரெல்லாம் மூட்டைக் கட்டி விட்டு, அந்த இரண்டு நாட்களில் என்னை உன்னில் இழந்ததை ஒரு அணைப்பில் சொன்னேன். உன் ஆமோதிப்பை அடரணைப்பில் உறுதி செய்தாய்.

திருமணத்தன்று உன் நெற்றியில் பொட்டிட்டபின்,என் வெட்கச் சிரிப்பில் நீ சிவந்து போனதுனக்கு நினைவிருக்கிறதா?

அன்று முதல் இன்று வரை உன்மீதான என்காதல் எவ்வளவு தித்திப்பாய் பயணிக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். சந்தேகமிருந்தால் என் உடலை அரிந்து ரத்தம் குடித்துப் பார்,தித்திக்கும் உன் நினைவுகளால் இனிக்குமென் இரத்தம்.

உன் மீதான என் காதல் இனி கூடுவதற்கு வாய்ப்பேதுமில்லை.ஏனெனில் இதை விட கூட்ட முடியும் என்று இருந்திருந்தால் அதை இப்பொழுதே செய்திருப்பேனே.

ஆக..

என் உணர்வின் உச்சம் நீ.. வாழ்க என் மீதான உன் காதல். அது மட்டுமே என்னை ஜீவித்திருக்கச் செய்யும் இனி.

மொத்தமாய் முத்தங்கள்,சித்தம் முழுக்க உன் நினைவுகள்
ரத்தம் முழுக்க உன் திசுக்கள்,இதயம் முழுக்க நீ.. என்றாலும்
நான் தானே நீ...

இப்படிக்கு,

காதலாய்,
காதலில்
காதலுடன்
காதலுக்கு
காதல்
கணவன்
-நன்றி : நர்சிம்

1 கருத்து:

  1. அருமை.... அருமையான படைப்பு...
    வாழ்த்துக்கள் திரு. நர்சிம் அவர்களுக்கு...
    பகிர்வுக்கு நன்றி தங்களுக்கு...

    பதிலளிநீக்கு