செவ்வாய், 16 ஜூலை, 2013

ஷாராஜ் கவிதைகள்















காதலோடு என்னைக் கொல்


தலையின் சுமை தலையேயாகத் திரிகிறேன் தாங்க மாட்டாமல்
எனக்கு உதவி செய், தயவு செய்து
காதலோடு என்னைக் கொல்
தாட்சண்யமற்று ஒரே வீச்சில் கண்டத்தைத் துண்டமாக்கு
பீறிடும் குருதித் தாரைகளை சப்புக்கொட்டியபடி பருகு
ஒரு சொட்டேனும் பூமியில் சிந்திவிடாமல்
பாரம் இறங்கி சவாசனத்தில்* ஷாந்த்தியுற்றிருக்கும் முண்டத்தை
நிலாக்காலங்களில் குதூகல ஊளையிடும்
கரும்புத் தோட்டத்து நரிக் கூட்டத்திற்கு விருந்தாக்கு
எனது ருத்ரக்ரந்தி*த் தலையை மரண சாசனமாக
வாரணாசி அகோரிகளுக்கு எழுதி வைக்கிறேன்
மண்டையோட்டுக்கு பாதகம் வராமல்
சிதைத் தீயில் தலைக் கறியைச் சுட்டுத் தின்னும் தந்த்ரம்
அவர்களுக்குத் தெரியும்
சிவன் மாமிசமென மஹா ப்ரசாதமாக அதை அவர்கள் உண்பார்கள்
மனித உடலிலேயே மிக ம்ருதுவானதும்
சமைக்காமலேயே சாப்பிடத் தக்கதுமான உதிரி பாகம்
மூளைதான்
(என் மூளைதின்னி நிலவான சந்த்ரிகாவுக்கு
இது நன்கு தெரியும்)
எனினும் சிவனுடையதைக் காட்டிலும் கலங்கிக் கூழாகிவிட்ட என் மூளையை
அகோரிகள் விரும்புவார்களா என்பது தெரியவில்லை
விரும்பாத பட்சத்தில்
எரியும் ஏதோவொரு அனாதைப் பிணத்தின் சிதை நெருப்புக்கு
அதை ஆகுதியாக்கலாம்
என் பித்தக் கபாலம் பின்பு அகோரியின் பிச்சைப் பாத்திரமாக ஆகும்
கங்கை நீர், மட்ட ரக ப்ராந்தி, பலி மிருக ரத்தம்
அனைத்தும் அதில் பருகப்படும்
தாவர, மாமிச பட்சணங்கள் யாவும் அதில் உண்ணப்படும்
முன்னம் அது உயிருள்ளதாக இருந்தபோதைப் போலவே
இச் சுவைப்புகளில் அது திளைக்கவும் கூடும்
தானே அவற்றைப் பருகியதையும் உண்டதையும் போல
மேலும் அது அப்போதும் பித்தத்தோடேயே இருக்கும்
அப்போதும் கனவு காணும்; அப்போதும் த்யானிக்கும்
ஆனால் நிரந்தரமான ஆழ் நீல சமாதியில்
அப்போதும் அது SPD*யாகவே இருக்கும்
எப்போதும் அகவுலகிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அது
அவ்வப்போது புறவுலக வாழ்வுற்குள்ளும் வந்து
தன் பாத்திரத்தை நடித்துச் செல்லும்
ஆனால் எப்போதும் எப்போதும்
தன்னையோ உலகையோ எண்ணி இளித்துக்கொண்டேயிருக்கும்
அசல் பித்தனாக

அடிக் குறிப்புகள்:
1.            சவாசனம் அல்லது ஷாந்த்தியாசனம் யோகா பயிற்சிகளில் இறுதியாக செய்யப்படுவது. உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுக்கும்படியாக தரையில் தளர்வாக மல்லாந்து படுத்துக்கொள்வது.
2.            ருத்ரக்ரந்தி: தண்டுவடத்தில் கீழிருந்து மேலாக அமைந்த குண்டலினி சக்கரங்களில் 1.மூலாதார் (தண்டுவட அடிப் பாகம்), 2. ஸ்வாதிஸ்தான் (பிறப்புறுப்பு) ஆகிய இரண்டும் ப்ரம்மக்ரந்தி; 3. மணிப்பூரகம் (தொப்புள்), 4. அனாஹதம் (இருதயம்) ஆகிய இரண்டும் விஷ்ணுக்ரந்தி; 5. விஷுத்தம் (கழுத்து), ஆக்ஞா (புருவ மத்தி) ஆகிய இரண்டும் ருத்ரக்ரந்தி. அதாவது, சிவனுக்கானது. குண்டலினி யோகத்தின் படிநிலைகளில் இதுவே உச்சம். யோகத்தின் கடவுளாக சிவன் ஆவதும் இவ்விதமே.
3.            SPD - Schizoid Personality Disorder. புற உலகிலிருந்து விலகி அக உலகிலேயே அதிகமும் வாழ்ந்துகொண்டிருக்கும் இயல்புடையவர்கள் ஸ்கிஸாய்ட் எனப்படும் மனப்பிளவினராக உளவியலில் வகைமைப்படுத்தப்படுகிறார்கள். இத்தகையோருக்கு ஏற்படும் மனச் சிதைவே ஸ்கிஸாய்ட் பர்ஸனாலிட்டி டிஸ்ஸார்டர். தீவிர படைப்பாளிகள் பலரும் இந்த வகைமையினர். Schizoid மனநிலை Schizophrenia என்னும் அகத் தோற்ற வாழ்வியல்புடன் நெருங்கிய தொடர்புடையது எனினும் இரண்டும் ஒன்றல்ல. ஆனால், ஒருவர் இந்த இரு வகை இயல்பையும் ஒருங்கே கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.


ஹைட்ரோஃபோபியா

பிச்சைக் கபாலம் ஏந்திப் பெற்ற பித்தம் உன் காதல்
என் அகச் சிவப்பை ஆழ் நீலமாக்கி, அகாலங்களை 
அமரத்துவமாக்கிய
அந்த அமுத விஷம் புளித்துத் திரிந்த நாளில்
நைந்த மூளையுடன் நாய்க் கலயத்தில் கொட்டினேன்
நக்கித் தின்ற அதற்கு மசை பிடித்து என்னையே கடித்தது
மண்டை பிளந்து மசை மூளை தெறிக்க
உலக்கையால் ஒரே அடியில் அடித்துக் கொன்று
ஊரெல்லைக்கப்பால் எறிந்தேன்
பெருங்குடல் புரட்டி வாந்தியோடு வந்துவிடுமளவு
அழுகிப் புழுத்து வெகு தூரம் நாறிக்கொண்டிருக்கும் அதன்
சடலத்தைக்
கொத்திப் பறந்த காக்கைகள்
ஆகாசத்திலிருந்து மல்லாந்து வீழ்ந்தன
மஞ்சள் பூவெடுத்த வேர்க்கடலைக் காடுகளெங்கும்
தண்ணீரைக் கண்டு பேரச்சம் கொண்டு
நாலு காலில் நடக்கும் நானின்று
சலைவாய் நாவுடன் சங்கிலி விரைக்கத் திமிறி
தொண்டை வெடிக்கக் குரைத்துக்கொண்டிருக்கிறேன் என் காதலை
மசை நாயின் மண்டையோட்டைக் கடித்துக் குதறி
ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது நிலவு

கடவுளின் பிரேதப் பரிசோதனை

கடவுளின் மண்டையை
சம்மட்டியால் அடித்துத் திறக்க முடியவில்லை
டெட்டனேட்டர்கள் மற்றும்
ஜெலட்டின் குச்சிகள் கொண்டு
வெடி வைத்துத் தகர்க்க வேண்டியதாகிவிட்டது
ஆட்டு மூளையைப் போல
தலை நிறைய மூளை அவருக்கு
பிக்காஸ் கடப்பாறை மண்வெட்டி சகிதம்
அதைத் தோண்டத் தோண்ட
எலும்புக்கூடுகள் வந்துகொண்டேயிருந்தன
வெட்டிரும்பால் பிளக்கப்பட்ட நெஞ்சுக்குள்
இருதயம் இல்லை
பதிலியாக ஒரு தவக்களை
வயிற்றைக் கிழித்தார்கள்
குடலுக்குள் ஜீரணமாகாத கோழித்தலையும்
மனித ரோமங்களும் 
ஒரு கிட்னி திருடப்பட்டிருந்தது மற்றது பழுது
ஈரல் கணையம் இத்யாயி உதிரி பாகங்கள்
மாற்றப்பட்டிருக்க வேண்டும்
குறி வைப்ரேட்டர் காண்டத்துடனும்
விடைப்புத் தளராமலும் இருந்தது
இயற்கை மரணமா கொலையா தற்கொலையா
யூகிக்க முடியவில்லை

நான் ஏன் எதிர் கவிஞனானேன்?

. நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்
இந்த உலகத்தில் கவிதைக்கு இடமிருக்கிறதா
இல்லை என்றால் இக்கணமே
வாசிப்பை நிறுத்திவிடுங்கள்
இருக்கிறது என்றால்
உங்களுக்கு நெஞ்சம் என்ற ஒன்று
இல்லை என்பதையாவது ஒத்துக்கொள்ளுங்கள்
பால் மணம் மாறாப் பச்சிளம் குழந்தைகளை
மாபாதகக் கொடூரம் செய்கிறார்கள்
வக்கிரக் காமாந்தகர்கள்
இளம் பெண்கள் பதின்வயதுச் சிறுமிகள் முகத்தில்
அமிலம் வீசி விகாரப்படுத்துகிறார்கள் ரௌடிகள்
மருமகள்கள் எரிவது இன்னும் நிற்கவில்லை
மனைவிகள் உருக்குலைவது தீரவில்லை
குழந்தைகள் பிச்சையெடுக்கலாமா
முதியோர் இல்லங்கள் ஏன் உருவாகின
மனநலக் காப்பகங்களுக்குள்ளோ
அரசு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்குள்ளோ
பார்வையாளராகவேனும் நீங்கள் சென்றிருக்கிறீர்களா
பசிக்கொடுமை தாங்காமல் ஒரு முதியவர்
தனது மலத்தையே தின்ன நேர்ந்த அவலம்
வந்த பின்னுமா
இந்த பூமி வெடித்துச் சிதறவில்லை?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக