வியாழன், 18 ஜூலை, 2013

முன்பு இறக்கை ரசித்த ஞானக்கூத்தன் கவிதைகள்


காலவழுவமைதி

“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’
“வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”
‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…


அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்
?

சைக்கிள் கமலம்

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்
தம்பியைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒரு தரம்
மிளகுக்காக மறு தரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்
வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்
வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக
குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை
எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன்


எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன்
என்றான் ஒருவன்
இல்லை என்றேன் அவன் சொன்னான்
என்னை இன்று உண்பித்தால்
உனக்குச் சில நாள் உழைப்பேன்
ஒன்றும் வேண்டாம் போ என்றேன்
இன்னும் சொன்னான். ‘என்னைப் பார்
கண்டதுண்டா நீ முன்பு
என்னைப் போல் சப்பட்டை
யான மனிதன்’
நானும் பார்த்தேன் அதுசரி தான்
‘எனக்குக் கொஞ்சம் சோற்றைப்போடு
பலவிதமாகப் பயன் படுவேன்
கதவில்லாத உன் குளியலறைக்கு
மறைப்பு போல நான் இருப்பேன்
வேண்டுமென்றால் என்னைக் கிடத்திப்
பொருள்கள் உலர்த்தலாம் நடுப்பகலில்.
அதுவும் இல்லை பெருங்காற்று
வீசும் மாலைக் காலங்களில்
உடம்பின் நடுவில் பொத்தலிட்டுக்
காற்றாடியாகச் சுற்றலாம் நீ’
என்றான் அந்தச் சப்பட்டை.
உள்ளே சென்றேன். வரும்வரைக்கும்
இருக்கச் சொன்னேன். நொடிப் பொழுதில்
சோற்றைக் கொணர்ந்தேன் ஒரு கையில்
மாலைக் காற்றின் நினைப்போடு.


திருப்தி

சஞ்சிகையைப் பிரித்தான். அங்கே
முப்பதாம் பக்கத்தைப் பார்த்தான்.
இரண்டு வரிகளில் ஒருகவிதை.
அதற்குக் கீழே இருந்த பெயரைப்
படித்ததும் அவனுக்கு ரத்தம் கொதித்தது.
கவிதை
எல்லோரும் நல்லவரே
அவரவர் நாட்டில் அவரவர் வாழ்ந்திருந்தால்
இரண்டு வார்த்தை ஆசிரியர்க்கு
எழுதிப் போடணும் ஆனால்
ஒன்றைப் பற்றி மட்டும் எழுதினால்
நன்றாய் இருக்காது. தெரிந்து விடும்
எனவே எழுதினான்.
சென்ற இதழில் கொய்ராலா
படத்தைப் போட்டு அசத்திவிட்டீர்
வாசுவின் எழுத்தில் முதிர்ச்சி கண்டேன்.
இறைச்சி கவுச்சி ஓரினப்புணர்ச்சி
பற்றிய கட்டுரை மொழிக்குப் புதிது.
கதைகளில் மாவு தோசை படித்ததும்
நாக்கில் எச்சில் ஊறிற்று
நல்ல கவிதைகள் கிடைக்கவில்லையா?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக