வெள்ளி, 19 ஜூலை, 2013

எழுத்தின் வீர்யம் -வீரா




வா.மு.கோமுவின் எழுத்தை முன் வைத்து....
--------------------------------------------------------------------
வா.மு.கோமு வின் எழுத்தை நான் சந்திக்க நேர்ந்தது சிறுபத்திரிக்கையின் மூலமான வாசிப்புப் பழக்கத்தின் போதுதான். எங்கள் கொங்குப்பகுதியின் விழிம்பு நிலை மனிதர்கள் பற்றிய பதிவாகத்தான் அது என் அகத்தில் செயல்புரியத்துவங்கியது. ஆரம்பம் முதலே அவருடைய எழுத்துக்கள் என்னை எவ்விதத்திலும் அசூசை கொள்ளச் செய்ய வில்லை. காரணம் எங்கள் பகுதியின் வட்டார வழக்கிலும் வாழ்க்கை நடைமுறையிலும் மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ள கதைகளையும் சொல்லாடல்களையும் வாழ்க்கையின் மறுபக்கத்தையும் தான் வா.மு.கோமு வின் எழுத்தில் நான் கண்டடைந்தேன். அவ்வகையான வாழ்க்கைமுறை எனக்கு வாய்க்கவில்லையென்றாலும்கூட அதை அருகிருந்து விழிவிரித்து ஆச்சர்யமாகப் பார்த்து வளர்ந்தவன் என்ற முறையில் அந்த வெள்ளந்தியான குசும்பு கொப்பளிக்கும் வாழ்க்கையின் சாரம் வா.மு.கோமுவின் எழுத்தில் மிகத் துல்லியமாகப் பதிவாகிவருவதை உணர்ந்தேன்.

வா.மு.கோமுவின் எழுத்தின் வீரியம் மிகத் தீவிரமாக வெளிப்பட்டது அவரின் சிறுபத்திரிக்கை தொடர்பான காலகட்டத்தில் தான். அங்கு புரையோடிக்கிடக்கும் புறக்கணிப்பு அரசியல்காரணமாகவும் தன்னுடைய லௌகீக நெருக்கடிகள் காரணமாகவும் மெல்ல வெகுஜன எழுத்துக்குத் தன்னைத் தானே மனவிருப்பமின்றி நகர்த்திக்கொண்டு வந்தவர். சிறுபத்திரிக்கை உலகில் அவர் செரிவுகூட்டி எழுதிய அப்பட்டமான பாலியல் எழுத்துக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகப் போகவே அவர்கள் வா.மு.கோமு மீது பலவகை அவதுாறுகளை மிக நாசூக்காக சந்தியில் உலவவிட்டார்கள். கலாச்சாரம் காக்கும் மிக உயர்ந்த ரசனைக்கார வாசகர்கள் என்ற இனத்தவர்களால் வா.மு.கோமு அவதுாறுக்குள்ளாக்கப்பட்டார். அவர் மீது அவர்கள் சுமத்தும் குற்றம் என்னவென்றால் பாலியலை மட்டுமே தன் எழுத்தில் முன்வைக்கிறார் என்பதே.

அவர் மீதான குற்றச்சாட்டை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன் ஒன்று, 'அவர் பாலியலை எழுதுகிறார்.' இன்னொன்று, 'அவர் பாலியலை மட்டுமே எழுதுகிறார்.'

முதல் விஷயம் சிக்கல் இல்லாதது. பெரிய விளக்கம் தேவையில்லாதது. காரணம், இலக்கியத்தில் பாலியல் சார்ந்த எழுத்தும் ஓர் அங்கம் என்பது இலக்கியம் உணர்ந்த அனைவருக்கும் தெரியும். பாலியல் சார்ந்தும் தவிர்த்தும் எழுதுவதென்பது அவரவர் தேர்வு மற்றும் திறன் சார்ந்தது.


இரண்டாவது விஷயம்தான் முக்கியமானது. இலக்கியம் என்பதே அனுபவங்களின் கடத்தல் தானே. தத்தமது திறனுக்குத் தக்கவாறு கைகூடும் வடிவவகைகளில் அனுபவங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. மனிதமனம் மிகுந்த நுட்பம் கொண்டது. சிடுக்குகள் நிறைந்தது. பாலியல் அனுபவம் என்பது மனித மனத்தின் பல்வேறு அடுக்குகளில் மிக சூக்குமமாக நிகழக்கூடியவை மட்டுமல்லாது ஒப்புமைப்படுத்த முடியாதவையும் கூட. எல்லோருக்குள்ளும் நிகழும் அந்த அனுபவங்கள் ஒரு கலைஞனுக்குள்ளும் நிகழ்ந்து அவன் மூலம் அது கலையாக வெளிப்படும் போது அதன் துாலவடிவம் எளிதில் புரிபடாத புதிர்த் தன்மை கொண்டதாகவே இருக்கும்.

வா.மு.கோமு வின் பாலியல் தொடர்பான கலை வடிவங்களைப் பற்றிய புரிதலோ அவரை எதிர்கொள்ளத் தேவையான மனவார்ப்போ இல்லாமல் அவரை அணுகுவது அவருக்கும் சரி நமக்கும் சரி இரண்டு தரப்புக்குமான மன அடுக்கைச் சீர்குலைக்கவே செய்யும்.. 

வா.மு.கோமு என் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இருப்பவர் அல்ல. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் இருந்திருக்கிறேன். அவரை அவதானித்திருக்கிறேன். அவரின் எழுத்து வேலையை அருகிருந்து பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு பித்து நிலையில் தன் கதைகளை எழுதக்கூடியவர். படைப்புகளை எழுதிவிட்டுச் செப்பனிட்டுத்திருத்தும் அவசியமில்லாது கற்பனையின் பிரவாகத்துக்கு ஒத்திசைந்து தன் எழுத்தை நேரடியாக இயங்க விடுபவர். அவரை அவர் போக்கில் இயங்க விடுவோம். தமிழ் இலக்கியம் அவருடைய எழுத்து வகைக்கும் இடம் கொடுக்கும் என்று அதன் வரலாறு நெடுகிலும் உதாரணம் வைத்திருக்கிறது. அவருடைய எழுத்தில் உடன்பாடில்லாதவர்கள் சற்று ஒதுங்கிக் கொள்வோம். தயவுசெய்து வா.மு.கோமுவுக்கு நாம் ஆடைகளை அணிய முயற்சிக்க வேண்டாம். அவர் நிர்வாணத்தை விரும்புகிறவர்.

-வீரா
18.07.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக