புதன், 24 ஜூலை, 2013

சிட்டுக்குருவிகள்- சிறுகதை- ராம் முரளி




கண்ணையன் தாத்தாவின் உடல் ஓலைகளால் வேயப்பட்டிருந்த அவர்வீட்டின் முன்திண்ணையில் கிடத்தப்பட்டிருந்தது. ஈமொய்ப தை போலஅவர் வீட்டைஅந்த ஊர்மக்கள்மொய்த்துக் கொண்டிருந்தனர் . ஊரில் எங்கு சாவு விழுந்தாலும் ஒன்றிகூடி ஒப்பாரிவைக்கும் கிழவிகள் ஒருபுறம் அலறிக்கொண்டிருந்தனர். சின்னஞ்சிறார்கள் மிரட்சியோடு அசைவின்றி திறந்திருந் தகண்ணையன் தாத்தாவின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிறுது நேரத்தில் எல்லாமும் முடிந்து விடும் கடும் மழைபெய்து ஓய்வதை போலகூடியிருக்கும் கூட்டத்திலிருந்து யாரோ நான்குபேர் கைத்தாங்கலாக மரக்கட்டை போன்ற அந்த உடலை ஊருக்கு வெகுதூரம் தூக்கிச்சென்று புதைக்கவோ , எறிக்கவோ போகிறார்கள். கண்ணையன் தாத்தாவின் 62வருட ஆட்டமும் மண்ணுக்கடியில் மறையபோகிறது.
கண்ணையன் தாத்தா தன் கடைசி காலத்தில் யாரிடமும் அதிகம் பேச்சுக் கொடுக்காமல் அந்த ஓலைகுடிசையின் உள்ளேயே வாழ்ந்து வந்தார். தானாக பேச வருபவர்களிடமும் பிடி கொடுக்காமல் ஒதுங்கியே இருந்தார். அவருக்கு உணவு கொண்டு செல்லும் கடைக்கார பொடியன் மட்டும்தான் தாத்தாவின் முகத்தை கடைசிகாலத்தில் முழுமையாக பார்த்தவன். அவரின் தீண்டா தனிமைக்குதான் இந்த உலகைவிட பெரியதாக நினைத்த அவரின் துணைவி பாக்கியம் சில ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்ததுதான் காரணம். கண்ணையன் தாத்தாவும் பாக்கியம் பாட்டியும் கடவுளின் குழந்தைகள். அவர்களென்று யாரும்இல்லை, அவர்களுக்கும் யாரும் பிறக்கவில்லை.
கண்ணையன் தன் சிறுவயதில் ஒரு டூரிங்டாக்கீஸில் தட்டுமுறுக்கு விற்றுக்கொண்டு கிடைக்கும் வருமானத்தில் தன் வயிற்றை கழுவிக்கொண்டிருந்தார். பாக்கியம் அதே டூரிங்டாக்கீஸ் வாசலில் இருந்த ஒரு இட்லி கடையில் தட்டு கழுவும் வேலை செய்து கொண்டிருந்தார். கண்ணையனும் பாக்கியமும் அந்த சிறுவயதிலேயே வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்டவர்கள். இருவரும் அவ்வப்போது டாக்கீஸின் பின்னால் இருந்த ஒரு மணல்மேட்டில் அமர்ந்து பல கதைகளை பேசி மகிழ்வார்கள். அவர்களுக்கு அப்போது தெரிந்ததெல்லாம் டூரிங்டாக்கீஸும் , இட்லிகடையும் , அந்த மணல்மேடும்தான். என்றாவது ஒருநாள் அந்த மணல் மேட்டை கடந்து காற்றோடு காற்றாக இழைந்து பறக்க வேண்டும் என்று இருவரும் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.
வயது ஏற ஏற அவர்களுக்கு வாழ்வின் நிஜம் புரியதுவங்கியது. அதுவரை பாக்கியத்தை சின்ன பெண்ணாக பார்த்தவர்கள் இப்போது அவளின் இளமை காரணமாக பிணம் திண்ணி கழுகை போல வட்டமடிக்க துவங்கிவிட்டனர். பார்வையாலயே பசியாற்றிக்கொள்ளும் அந்த மரியாதைக்குரியவர்களை எதிர்த்து பாக்கியத்தால் என்ன செய்ய முடியும் இரையாவதை விட. பாவம் கண்ணையனும் தன் பாக்கியத்தின் நிலை எண்ணி உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தான்
ஒரு நாள் மாலை வேலையில் அந்த மணல் மேட்டில் இருவரும் அமர்ந்து தங்களின் எதிர்காலம் குறித்துபேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வானம் பொத்துக்கொண்டுமழையை சிந்தியது. மழையின் சாரல் கண்ணையனின் முகத்தில் அடித்தவுடன் அவனுக்குள் ஒரு புது உற்சாகம் பிறந்தது. பாக்கியத்தின் கையை இறுக பற்றிக்கொண்டு வேகமாக ஓடத்துவங்கினான். அவளும்அவன் பின்னாலயே வேகமாக ஓடினாள். இருவரும் அந்த இட்லி கடையை கடந்து, டூரிங்டாக்கீஸை கடந்து, மணல்மேட்டையும் கடந்து நீண்டதூரம் ஓடிக்கொண்டே இருந்தார்கள்மழை ஓய்ந்தது.
ஏறக்குறைய கண்ணையனும் பாக்கியமும் எல்லா ஊர்களிலும் சுற்றி இருப்பார்கள். எங்கும் அவர்களை நிம்மதியாக இருக்க விடவில்லை. அவர்களுக்கு தேவையெல்லாம் ஒரு குடையின் நிழல் மட்டும்தான். ஆனால்அது கூட கிடைக்காமல் பாவம் அவர்களை இந்த சமூகம் துரத்திக்கொண்டே இருந்தது. ஒரு வழியாக அவர்களின் ஆயூள் பாதியை கடந்த பின்தான் அவர்கள் தேடியது அவர்களுக்கு கிடைத்தது. மலை அடிவாரத்தில் காற்றின் மணமும் செடிகொடிகளின் இரைச்சலும், சின்ன சின்ன விலங்கினங்களின் வாழ்விடமாகவும் இருந்த அந்த ஊரில் அவர்களுக்கென்று ஒரு இடம். ஒருமடி கிடைத்தது.
இனி எல்லாம் நலமே என்று நினைத்து மகிழ்ச்சியாக வாழ துவங்கினார்கள் இந்த தம்பதியினர். வாழ்வில் இத்தனை காலம் ஓடிய ஓட்டம் ஒரு வழியாக நின்று விட்டது என்று அகம் மகிழ்ந்தார்கள். தங்களுக்கென்று அந்த ஊரில் ஒரு சின்ன குடிசை கட்டிக் கொண்டார்கள். பல செடிகளை தங்கள் வீட்டை சுற்றி நட்டுக்கொண்டார்கள். இரவில் தினமும் அந்த திண்ணையில் அமர்ந்து நிலாவை ரசித்துக் கொண்டிருப்பார்கள். தங்கள் வாழ்வில் நிலா இவ்வளவு அழகாக இதுவரை தெரிந்ததில்லை. கண்ணையன் அதே ஊரில் ஒரு வேலையும் தேடிக் கொண்டார். மாதா மாதம் சம்பளம் என்பதை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். இதுவரை கண்ணையன் தன் வாழ்நாளில் மாதசம்பளம் எல்லாம் வாங்கியது கிடையாது.  தினகூலிகள்தான். பாக்கியத்திற்கு தன் கணவன் மட்டும்தான் உலகம். சிறு வயது முதல் அவள்பட்ட அவமானங்கள் அவளை ஊராருடன் பழகவிடாமல் தடுத்து விட்டது. ஆனால் என்ன இதோ கண்ணையன் இருக்கிறாரே , அவரைவிட உலகில் உயர்ந்தது இருக்கிறதா என்ன? ஒரு வேளை இந்தனை ஆண்டு காலத்தில் என்றாவது ஒருநாள் கண்ணையனுக்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்திருந்தால்? நினைக்கையில் பாக்கியத்திற்கு நெஞ்சே வெடிப்பதை போல இருந்ததுஅவர்களின் வாழ்க்கை மிகவும் அழகாக மாறிக்கொண்டிருந்த தருணத்தில் தான் பாக்கியம் திடீரென்று உடல் நிலை முடியாமல் இறந்து போனாள். இந்த திடீர் இழப்பை கண்ணையனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உலகமே ஒரு நொடி இருண்டதை போல இருந்தது அவருக்கு. பாக்கியத்தின் உடலை எங்கோ கொண்டு சென்று எறிக்கவோ தொலைவில் கொண்டு சென்று புதைக்கவோ அவருக்கு ,மனமில்லை. அதனால் தன் குடிசையின் திண்ணையை தோண்டி அதிலேயே பாக்கியத்தை புதைத்து வைத்தார். பாக்கியம் தன்னோடு இல்லை என்பதை அவரால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. பாக்கியத்தை பற்றிய நினைவு வரும் போதெல்லாம் அந்த திண்ணையில் அமர்ந்து அவளோடு பேசுவதாக நினைத்து தனக்குதானே பேசிக்கொண்டிருப்பார்இரவில் நிலாவை ரசிப்பார் , செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார் பாக்கியத்தையும் சேர்த்துக் கொண்டு. இப்படியாக அவர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை வெறுக்க துவங்கினார். இருளின் சுவையும், தனிமையின் நிரையும்அவருக்கு பழகிபோய்விட்டது. யாராவது ஒருவர் வீட்லதனியாஎன்னய்யாபண்ற" என்றால், "பாக்கியத்தோடபேசிக்கிட்டுஇருக்கேன்" என்பார். இது எதுவும் ஊர்காரர்களுக்கு தெரியாமல் இல்லை ஆனாலும் அவரின் நிலை உணர்ந்து அவரை அப்படியே விட்டு விட்டார்கள்.
இதோ இன்று எல்லாம் முடிந்து விட்டது. கண்ணையன் தாத்தாவின் உடலை யாரோ தூக்குகிறார்கள். ஊர் கலைய துவங்குகிறது. செடி கொடிகள் இலைகளை உதிர்க்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக தொலைவில் மறைந்து கொண்டிருக்கும் கண்ணையனின் சடலத்தை அவர் வீட்டின் திண்ணை மட்டும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

2 கருத்துகள்: