ஞாயிறு, 21 ஜூலை, 2013

வேதாளம் - அரங்கன் தமிழ்


முருங்கை மரத்து
வேதாளத்தை
விக்ரமாதித்தன்
பிடிக்கச் செல்வதாய்
சொல்லும் போதே
உடலில்
நுழைந்து விடும்
திருவிழா
உற்சாகம்

வேதாளத்து கதையோடு
வேதாளம் சொல்லும்
கதையும் சேர்த்தால்
இரட்டை மகிழ்ச்சி

கதை சொல்லி
விடை கேட்கும்
வேதாளத்தின்
இக்கட்டான
இறுக்கத்திற்கு
உடல் வேர்த்து
உள்ளங்கை மிட்டாய்
கரையும்..

பதிலளிக்க மறுத்தால்
தலை வெடித்து
சிதறுமென
பயமுறுத்துகையில்
அனிச்சை செயலாய்
காதுகளை மூடிக்கொள்ளும்
கைகள்

மீண்டும்
மரம் ஏறிக்கொள்வதாய்
முடியும்
வேதாளத்தின் கதை
மற்றுமொரு நாளின்
உற்சாக திருவிழாவின்
துவக்கம்

குளிர் பான
உறிஞ்சுதலோடு
விசைப் பலகையில்
நடனமாடும்
விரல்களால்

கணிணித்திரையில்
கண் படுபவரையெல்லாம்
துப்பாக்கியில் சுட்டு
முன்னேறுகிற
காணொளியோடு
விளையாடும்
அண்டைவீட்டு சிறுவனிடம்

வேதாள விக்கிரமாதித்தன்
கதை தெரியுமா.?
என்று கேட்டால்.
இணையதள முகவரி
இருக்குமா.?

என கேட்கிறான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக